/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

தாமிரபரணி

இது பாதம் பயணித்த...பயணிக்கும்...பயணிக்க... வேண்டிய பாதை...

My Photo
Name:
Location: திருநெல்வேலி, தமிழ் நாடு, India

பிறந்தது:- சிவஞானபுரம். வளர்ந்தது:- ஆவரைகுளம். பொழுது கழிந்தது:- மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்த என் காணியாறு விளை. தற்போது:- காவிரிக்கரை.

Sunday, August 27, 2006

சிந்திப்பார்களா இந்த தறுதலைகள்!...

சென்ற வாரம் போல் இந்த வாரமும் அம்மா மண்டபம் சென்று காவிரியில் நீராடிவிட்டு வரலாம் என்று நேற்று மாலையே தோன்றியது.
அந்த நேரத்தில் அலுவலகத்தில் இருந்ததால் உடன் பணிபுரியும் நண்பர் திரு.தர்மலிங்கத்திடம் “நாளை அம்மா மண்டபம் சென்று காவிரியில் நீராடிவிட்டு வரலாமா?” என்றேன்.
அவர் “நாளை விநாயகர் சதுர்த்தி. வீட்டில் சாமி கும்பிட வேண்டும் சார். அடுத்த வாரம் போகலாமே” எனறார்.
அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்த பின்னரும் காவிரிக்கு செல்வது பற்றியே சிந்தனை இருந்தது.
“நாளை அம்மா மண்டபம் சென்று காவிரியில் நீராடிவிட்டு வரலாமா?” என்று என் மனைவியிடம் கேட்டேன்.
அவள் என்னைப் பார்த்த பார்வையில் இருந்த, “எங்கயும் வெளிய போயிட்டு வருவோமா என்று நீங்களாக கேட்க மாட்டீர்களே, நான் கேட்டாலும் அந்த வேலை இந்த வேலை என்று...., இன்று மட்டும் எப்படி?...” என்ற உள் அர்த்தம் இருந்ததை புரிந்து கொள்ள முடிந்தது.
வாண்டுகள் இரண்டும் “போகலாம் பா...போகலாம் பா...” என்றார்கள்.

இன்று காலையிலேயே (07.30am) எழுந்து TV-யில் செய்தி, திரைவிமர்சனம், அப்புரம் தமிழ் பேசிய Speed திரைப்படம், விஜயில் ஜாக்கி ஜான் திரைப்படம் என மாற்றி மாற்றி பார்த்து விட்டு மாலை 03.15 மணிக்கு புறப்பட்டு 03.45 மணிக்கெல்லாம் அம்மா மண்டபத்தில் காவிரியில் குழந்தைகளுடன் சேர்ந்து நீராட ஆரம்பித்து விட்டேன். என் மனைவி கரையிலேயே உட்கார்ந்து விட்டார்கள்.
கூட்டம் இன்று அதிகமாக இல்லை. ஐந்தாறு பெண்கள். சுமார் 25 ஆண்கள். குளித்துக்கொண்டிரிந்த ஆண்களில் முக்கால் வாசிபேர் ஜட்டி மட்டுமே அணிந்திருந்தனர். என்னோடு சேர்த்து சிலர் மட்டுமே துண்டு அல்லது அரைக்கால் சட்டை அணிந்திருந்தனர். அதிலும் சில இளைஞர்கள் பெண்கள் குளித்துக் கொண்டிருந்த பகுதியில் சென்று ஒருவரை ஒருவர் தண்ணீருக்கு மேல் தூக்கி விளையாண்டு கொண்டு இருந்தனர். அதுவும் அவர்களின் ஜட்டியை வெளிக்காட்டுவதிலேயே கவனமாக செயல்பட்டனர். அவர்களின் செயல் எனக்கே அருவருப்பாக இருந்தது. அங்கு குளித்துக்கொண்டிருந்த பெண்களுக்கு எப்படி இருந்திருக்குமோ?.
நான் என் குழந்தைகளுக்கு நீச்சல் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த இடத்தின் அருகில் அவ்வாறு விளையாடிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களிடம் “பெண்கள் குளிக்கிற இடத்துல நின்னு இப்படி குளிக்கிறீங்களே அந்தப்பக்கம் போகக்கூடாதா?” என்றவுடன் ஒன்றும் சொல்லாமல் ஆனாலும் ஏதோ முனுமுனுத்துக் கொண்டு சற்று நகர்ந்து சென்றார்கள்.
மீண்டும் நான் என் குழந்தைகளுக்கு நீச்சல் பழகிக்கொடுப்பதைத் தொடர்ந்தேன். அந்த இளைஞர்களின் செயல் தொடர்ந்து கோண்டே தான் இருந்தது. நான் கரையேரி உடை மாற்றும் போதும் அவர்கள் அவ்விதமே தங்கள் செயலை தொடர்வதை கவனிக்க முடிந்தது.
நாங்கள் எங்கள் பைக் நின்று கொண்டிகுந்த இடத்திற்கு வந்து நான் பைக்கை எடுத்துக் கொண்டிருந்த போது என் மனைவி,
“ஏங்க இந்த பையன்க இப்படி அசிங்கமா, அருவருப்பா குளிச்சிக்கிட்டு, விளையாடிகிட்டு இருக்கான்க. அவங்க அக்கா தங்கச்சி முன்ன இப்படி குளிப்பான்களா? அல்லது அவங்க அக்கா தங்கச்சி முன்ன யாராவது இப்படி அசிங்கமா, அருவருப்பா குளிச்சிக்கிட்டு, விளையாடிகிட்டு இருந்தா இவன்களுக்குத்தான் எப்படி இருக்கும். குளிச்சிக்கிட்டு வெளிய போன ஒரு அம்மா கூட எவ்வளவு வருத்தப்பட்டுகிட்டு இவனுங்க பிறப்பைப் பற்றிக் கூட எவ்வளவு கேவலமா பேசிக்கிட்டு போனாங்க தெரியுமா?” என்றாள்.
எனக்கும் கூட அந்த அம்மா இவனுங்க பிறப்பைப் பற்றிக் கேவலமா பேசிக்கிட்டு போனதும் சரியோ?! என்று எண்ணத்தோன்றியது.
ஆம்... நல்ல பண்பு நலன் கொண்ட தாய் தந்தையர் தங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக நல்ல பண்புகளைக் கற்றுக் கொடுத்திபுப்பார்கள்.
இவர்களைப் போன்ற தரங்கெட்டவர்கள் என்று தான் திருந்துவார்களோ?
இவர்கள் திருந்துவது இருக்கட்டும் திருத்துபவர்களுக்காவது தகவல் சொல்வோம் என்று தோன்றியதால் 100-க்கு போன் செய்து தகவலைக் கூறிவிட்டு வீட்டை நோக்கி பயணித்தேன்.

Monday, August 21, 2006

அம்மா மண்டபம்!...

திருச்சிக்கு வேலை மாற்றலாகி வந்து இரண்டு ஆண்டுகளும் இரண்டு மாதங்களும் ஓடிவிட்டது. உண்மையில் நான் மாற்றல் கேட்டது சென்னைக்கு. ஆனால் உத்தரவு கிடைத்தது திருச்சிக்கு.

திருச்சிக்கு பணியிட மாறுதலில் வரப்போகின்றோம் என்பது தெரிந்த பின் இரவு துக்கத்திற்கு முன் தினம் கனவு தான், திருச்சிக்கு வந்த பின் அன்றாடம் என்ன என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி.

தினம் அதிகாலை காவிரியில் குழந்தைகளோடு நீந்தி சுகமான நீராடல், வாரம் ஒருமுறையேனும் ஸ்ரீரங்கநாதர், உச்சிப்பிள்ளையார் தரிசனம், மாதந்தோரும் கல்லணை, தஞ்சாவூர் பிக்னிக், இன்ன பிற... கனவுகள்.

ஆனால் திருச்சி வந்த பின் காவிரி குளியல் எனக்கு கானல் நீராகிப்போனது. எப்போதாவது காவிரியில் தண்ணீர் திருச்சியை எட்டிப்பார்க்கும் போது நான் வேலை நிமித்தமாக சென்னை அல்லது பெங்களூரில் இருந்து கொண்டிருப்பேன்.

ஆறு மாதத்திற்கு முன் ஒருமுறை கிடைத்த சந்தற்பத்தில் மனைவி, குழந்தைகள் சகிதம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சென்று வந்தேன். அப்போது நீராட முடிய வில்லை.

இரண்டாவது முறையாக இன்று மீண்டும் அம்மா மண்டபம் செல்லும் சந்தர்ப்பம் வாய்த்தது.

நேற்று அலுவல் முடித்து வீட்டிற்கு புறப்படும் போதுதான் உடன் பணிபுரியும் நண்பர் திரு. தர்மலிங்கம், "சார் நாளைக்கு காலையில காவிரிக்கு குளிக்க போகலாமா சார் " என்றார்.

சந்தோசமாக, "போயிட்டு வருவோம் சார் " என்றேன்.

"சார் நானும் வர்ரேன் சார்" என்றார் எங்களின் ஜூனியர் சுரேஷ்.

மூவரும் காலையில் ஏழுமணிக்கு TVS-டோல் கேட் அருகில் ஒன்று கூடி அதன் பின் அம்மா மண்டபம் சென்று குளிக்கலாம் என்று முடிவானது.

நான் வீட்டிற்கு வந்து குழந்தைகளிடம் காவிரிக்கு குளிக்கச் செல்லும் தகவலை சொல்ல குளந்தைகளும் அணிசேர்ந்து கொண்டனர்.

காலையில் 06.45 மணிக்கு செல்பேசி சிணுங்கியது. நல்ல தூக்கம். அரைத்தூக்கத்திலேயே அதன் சிணுங்கலை நிறுத்திவிட்டு மீண்டும் தூக்கம்.

மறுபடியும் 07.00 மணி, 07.15 மணி, 07.25 மணிக்கு செல்பேசி சிணுங்கவே ஒரு வழியாக எழுந்து அவசர அவசரமாக புறப்பட என் மகன் ஆதித்யாவும் கூடவே பைக்கில் ஒட்டிக்கொண்டான்.




அம்மா மண்டபம் சென்று சேர்ந்த போது மணி 08.00 ஆகிவிட்டது.
கூட்டம் நிறைய இருந்தது. நிறைய பேர் தர்பணம் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்.

நண்பர்கள் இருவரும் நீராடிக்கொண்டிருந்தார்கள். நானும் ஆதியும் அவசர அவசரமாக உடைமாற்றிக்கொண்டும் என் செல்பேசியை பத்திரமாக பாண்ட் பாக்கட்டில் சுருட்டி வைத்துவிட்டும் நீராட நண்பர்களோடு கலந்து கொண்டோம்.

காவிரியில் நீர் வரத்து அதிகமாக இருந்தது. தொடர்ந்து ஒரேயிடத்தில் நிற்க முடியாத படி பாதத்திற்கு அடியிலிருந்த மண்ணை நீர் அபகரித்துச்சென்றது. குளியல் சுகமாகவே இருந்தது.
கண்கள் மட்டும் அடிக்கடி செல்பேசியை சுருட்டி வைத்திருந்த இடத்தையே சுற்றிச்சுற்றி வந்தது.


நாங்கள் குளித்துக்கொண்டு இருந்த இடத்திற்கும் சற்று கிழக்கு பக்கமாக நின்று ஒல்லியான தேகம் கொண்ட மனிதர் மட்டும் தன் கையில் இருந்த தூண்டிலில் அரைத்த சாதத்தை சிறிது எடுத்து தூன்டிலில் ஒட்டி தண்ணீரில் விசுவதும் மீனை பிடிப்பதுமாக தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தார். அவர் மீனைப் பிடித்த லாவகமும் சுறுசுறுப்பும் அழகும் இன்னும் கண்ணைவிட்டு மறைய மறுக்கின்றது.



ஒருமணி நேரம் குளித்துவிட்டு கரையேறும் போது அவரை, அனுமதியோடு என் காமரா செல்பேசியில் பதிவு செய்து கொண்டேன்.

அவர் நாங்கள் குளித்து முடிவதற்குள் அந்த ஒரு மணி நேரத்தில் பிடித்த மீனின் மதிப்பு ரூ.100/- இருக்கும்.

உழைப்பவன் எங்கும் பிழைத்துக்கொள்வான்.

Friday, August 18, 2006

சிக்கூன் குனியா...அரசு மெத்தனம் ஏன்?

சிக்கூன் குனியா...
இந்த வார்த்தையை உச்சரிக்காத தமிழ் உள்ளங்கள் மிகக்குறைவு.

இந்த வார்த்தையைக் கேட்ட உடன் ஒரு நிமிடம் உரைந்து போகாத கிராமத்து அப்பாவிகள் அதைவிட மிகக்குறைவு.

அதேபோல் இந்த வார்த்தையைப்பற்றி பசப்பல் வார்த்தைகளை உதிர்க்காத அரசியல் வாதிகளும், மாவட்ட ஆட்சித்தலைவர்களும் மிக அரிது.

ஆச்சரியமான, ஆனால் வெட்கி தலை குனிய வேண்டிய உண்மையும் ஒன்று உள்ளது. அது சிக்கூன் குனியா என்றால் என்னவென்று முழுவதுமாக அறிந்திராத மருத்துவர்கள்.

தமிழகத்தின் தென் மாவட்டத்து மக்கள் இந்த நோயின் பிடியில் சிக்கி தவித்துக்கொண்டும், தாங்களே தள்ளாடித் தள்ளாடி கரையேறிக்கொண்டும் இருக்கின்றார்கன்.

ஆனால் நோயைக்கட்டுப்படுத்த வேண்டிய அரசும் அரசு எந்திரங்களும் நோயைப்பற்றிய உண்மைகளை மறைப்பதிலேயே காலத்தை விரையம் செய்துகொண்டிருக்கின்றன.

புத்திசாலிகளான தென்மாவட்டத்தைச்சார்ந்த பல மருத்துவர்களோ தங்கள் வியாபாரத்தில் நல்ல அறுவடையை அனுபவித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

சிக்கூன் குனியா அவ்வளவு கொடிய நோயா? என்றால் அதுவும் உண்மைதான். ஆனால் அரசு அஞ்சி நடுங்கி உண்மைகளை மறைக்கும் அளவுக்கு உயிர் போக்கும் கொடிய நோய் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

என் அனுபவத்திலிருந்தும் நான் விசாரித்த பல நூறு சிக்கூன் குனியா பாதித்த நோயாளிகள் சொன்ன விபரங்களிலிருந்தும், நோயைப்பற்றிய சில உண்மைகள், "சிக்கூன் குனியாவினால் பாதிக்கப்படுபவர்கள் இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை கடுமையான ஜூரத்திற்கு உட்படுகின்றார்கள், கூடவே உடலில் உள்ள அத்தனை மூட்டுக்களிலும் தாங்க முடியாத வலி. இந்த மூட்டு வலி ஒரு வாரம் முதல் ஆறு மாதம் வரை தொடரலாம். நோய் வாய்ப்பட்டவர் காலைக்கடனை கழிக்கச்செல்ல மற்றவர் துணை தேவைப்படலாம் [இதில் தப்பிப்பிழைப்பவர் உண்மையில் புண்ணியம் தெய்தவராவார்]. பலருக்கு மூட்டு வீக்கமும் ஏற்படுகின்றது. கொஞ்சம் குண்டானவர்கள் பாடுதான் திண்டாட்டம்".

ஆனால் இரண்டு மூன்று நாட்கள் சாதாரண பாராசிட்டகால் மாத்திரை எடுத்துக்கொண்டாலேயே காய்ச்சல் குணமாகிவிடுகிறது. அல்லது ஊசி போட்டுக்கொள்ளலாம் (பாராசிட்டமால் தான்). வலிக்கு ப்ரூபின்(IBUPROFEN) எடுத்துக்கொள்ளலாம். கூடவே ப்ரூபினால் பக்கவிளைவு ஏற்படாமல் இருக்க மாத்திரை சாப்பிடுவதும் உத்தமம்.

சிக்கூன் குனியா பற்றிய உண்மைகள் இவ்வாறு இருக்க அரசின் கையாலாகாத்தனத்தாலும், நோயைப்பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களிடம் அரசு ஏற்படுத்த தவறியதாலும் மக்களிடம் சிக்கூன் குனியா நோய் பற்றிய தவறான எண்ணமும் பய உணர்ச்சியுமே மேலோங்கி நிற்கிறது. இது மக்களிடம் சிக்கூன் குனியா நோய் பற்றிய வேண்டாத பீதியையும் கலக்கத்தையுமே ஏற்படுத்துவதுடன் அரசு மீதும் மக்களுக்குள்ள நல்லெண்ணெத்தையும் சீர்குலைப்பதாகவே அமையும். எனவே அரசு இனியேனும் விரைந்து நடவடிக்கை எடுத்து சிக்கூன் குனியா பரவலாக உள்ளதை பெருந்தன்மையோடு ஒத்துக்கொண்டு, அந்நோய் பரவால் தடுக்க நடவடிக்கை எடுப்பதோடு, அந்நோயைப்பற்றிய விழிப்புணர்ச்சியையும் மக்களிடம் ஏற்படுத்த முனைய வேண்டும். இது ஒன்றும் உயிர்க்கொல்லி நோய் இல்லை என்பதையும் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

செய்யுமா அரசு. அல்லது மீண்டும் தமிழ் நாட்டில் சிக்கூன் குனியா இல்லை என்ற பழைய பல்லவியையே பாடப்போகின்றார்களா? பொருத்திருந்து பார்ப்போம்.

பி.கு:- எங்கள் ஊரில் 95% சதவீதம் பேருக்கு சிக்கூன் குனியா தாக்கியது. எங்கள் குடும்பத்தில் அனைவரையும் நோய் தாக்கியது. அப்பா இறந்த போது(26.07.2006) ஊர் சென்றுவந்த எனக்கும் என் வீட்டிலுள்ள அனைவருக்கும் சிக்கூன் குனியா வந்து இப்போதுதான் குணமடைந்து வருகிறோம்.

Monday, August 14, 2006

நீ எங்கே செல்கின்றாய்?...

என்
மூடிவிட்ட இமைக்கூண்டிற்குள்
உன்
நினைவுப் பறவைகள்
சிறகடித்துப் பறக்கின்றன.

என்
மனச்சிறைக்குள் அகப்பட்டாலும்
அவை
மவுனப்போராட்டம் நடத்துகின்றது.

மதில் சுவர்களாய்
என்
இமைக்கதவுகளை மூட நினைத்தாலும்
விழி வண்டுகள்
உன்னை நோக்கியே பறக்கின்றன.

கனவில் வரும்
உன்
நினைவுகளுக்குக் கூட
இத்தனை வல்லமையா?
என்னை
கவிதைகள் படைக்க தூண்டுகின்றதே!

உலகத்தையே
இருள்
சூழ்ந்துவிட்டதென்ற பிரேமையில்
நான் இருக்கும் போது
நீ மட்டும்
என்னுள் ஒளிப்பிரவாகம்
நடத்துவது ஏன்?

சமுதாயமே
வெறுத்துப்போன எனக்குள்
நீ வந்து
சாமரம் வீசுவதேன்?

இராகத்தையே
அறியாத என்னுள்
பூபாளத்தைப்
பாடத்தூண்டுவதேன்?

கண்களின்
யாகத்தை அறியாத எனக்கு
அதைக் கற்றுத்தந்தவள்
நீயல்லவா?

நானாக இல்லாத
என்னுள்
என்னைக் காட்டிவிட்டு
நீ
எங்கே செல்கின்றாய்?

காயத்திற்கு
மருந்தைக் கூறிவிட்டு
நீயே
காயத்தை
சுமந்து செல்வது நியாயமா?

நீ சென்ற பின்
மறந்து போக
உன் நினைவுகள்
தூறல் விட்டால் மறைந்து போகும்
வானவிற்கள் அல்ல.
உன்
நினைவுச் சுவடுகள்
எப்போதுமே அழியாத
வடுக்கள்.

கண்மணி
உன்
பாதச்சுவடுகளையாவது காட்டு
நானும் பயணிக்கிறேன்.
-----------------------------------------------------------------------------
02-02-1990-ல் கல்லுரியில் படிக்கும் போது எழுதியது.
-----------------------------------------------------------------------------

Thursday, August 10, 2006

இதய தெய்வத்திற்கு 15-ம் நாள் நினைவஞ்சலி

கடந்த 26.07.2006-ம் தேதி இப்பூ உலகைவிட்டு பிரிந்த என் தந்தையின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்